Coimbatore Institute of Technology Alumni 1976
LIVINGSTON PETER GOLDWYN
- Excellence outcome of CIT Coimbatore
தன் இளவயதில் விளையாட்டுப் பிள்ளையாக ஆடி மகிழ்ந்து, நண்பர்களுடன் குலாவி, கல்லூரிப் படிப்பையும் ஒரு விளையாட்டாகவே எடுத்துத் தேர்ந்த லிவிங்ஸ்டன் பீட்டர் கோல்ட்வின் இன்று ஆசிரியப் பெருமக்களுள் செயற்கரிய செய்த ஒரு சாதனையாளராக விளங்குகிறார். கோவை மாநகரில் கோவைப்புதூரிலுள்ள VLB ஜானகியம்மாள் பாலிடெக்னிக் எனும் தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரியும் இவர், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலிருக்கும் அனைத்துப் பாலிடெக்னிக் கல்லூரிகளின் மத்தியில் தலைசிறந்த விருதான The Best ISTE Chapter Chairman Award எனும் விருதினை ISTE (Indian Society of Technical Education) என்ற அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டு, பாண்டிச்சேரி மாநில முதல்வர் திரு ரங்கசாமி அவர்களிடமிருந்து 2002-2003 ஆண்டுகளில் அவர் புரிந்த பல சாதனைகளுக்காகப் பெற்றார். ஆசிரியர் தினமான இந்த நன்னாளில் அவரது சாதனைகளை நினைவுகூர்வது மிகவும் பொருத்தமே.
திருநெல்வேலியில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்த திரு. M. பொன்னுசாமி என்பவரின் மகனான லிவிங்ஸ்டன் அவர்களுக்கு 7 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள். லிவிங்ஸ்டன் Coimbatore Institute of Technology என்ற கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் 1971 முதல் 1976 ஆம் ஆண்டு வரை பயின்றார். இரத்தத்திலகம் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒத்தெல்லோ எனும் பாத்திரமேற்று ஒரு நாடகத்தில் நடித்ததைப் பார்த்த லிவிங்ஸ்டன் தானும் அவர் போலவே ஒரு கருப்புப் போர்வையை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் விளிம்பைத் தலையில் கட்டி ஒத்தெல்லோ வசனம் பேசி நண்பர்களை அசத்தியவர். ஒரு முறை மாறுவேடப் போட்டியில் அவர் அராபியராக உடையணிந்து குளறுபடியான நகைச்சுவை வசனங்கள் பேசி மாணவர்களோடு ஆசிரியர்களையும் கவர்ந்திருக்கிறார். லிவிங்ஸ்டன் ஒரு மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். அனைவரது கவனத்தையும் தன் பேச்சில் லயிக்க வைக்கும் திறன் படைத்தவர். சிரிக்காத வாய்களையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்.
கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் B.E. Civil Engineering முடித்தபின் கிண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் 1978ம் ஆண்டு M.E. Civil Engineering என்ற முதுகலைப் பட்டமும் பெற்றார். அதன்பின் 1978 முதல் 1983 ஆம் ஆண்டு வரை அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். அவர் தான் மாணவராயிருந்த காலத்தில் தன் மனநிலை எவ்வாறிருந்ததென்பதை நினைவுகூர்ந்து அதன்படித் தனது மாணவர்களின் மனதைப் புரிந்து கொண்டு அவர்களுடன் மிகுந்த நட்புடனும் அக்கறையுடனும் பழகினார். அதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் அவரிடம் மிகுந்த அன்புடனும் பக்தியுடனும் இருந்தனர். மாணவர்களைக் கல்வியில் மட்டுமின்றி, நாடகம், இசை, நடனம், புகைப்படக் கலை முதலிய கலைத்துறைகளிலும் அவர் வழிநடத்திச் சென்றார்.
கல்வியில் பின்தங்கியிருந்த பல மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் சொல்லிக் கொடுத்தார். பொருளாதார வசதியற்ற சில மாணவர்களுக்குக் கல்விக் கட்டணமும் செலுத்தினார். ஒரு முறை மாணவர்களிடையே ஏதோ ஒரு காரணத்தினால் பெரிய கலவரம் மூண்டது. அதைக் கட்டுப்படுத்த அம்மாணவர்கள் மத்தியில் சென்றபோது ஒரு மாணவர் ஓங்கி வீசிய hockey stick இவர் காலில் தவறுதலாகப் பட்டு பலத்த காயமடைந்தார். தம் அன்பிற்குரிய ஆசிரியருக்குக் காயம் பட்டதை அறிந்த மாணவர்கள் மனம் துடித்துப் போயினர். தங்கள் சண்டையை அத்தோடு நிறுத்திய அவர்கள் சமாதானமடைந்தனர். லிவிங்ஸ்டன் அவர்களின் அரிய பணியை அண்ணாமலைப் பல்கலைக் கழகக் நிர்வாகம் அங்கீகரித்து அவரது இளைய சகோதரருக்கு இலவசமாகக் கல்லூரியில் பயில அனுமதியும் அளித்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்த லிவிங்ஸ்டன் அராபிய நாடுகளில் ஒன்றான மஸ்கட் நகரில் பொறியாளராகச் சில காலம் பணியாற்றி அங்கும் தன் தரமான, சிறந்த உழைப்பிற்கான பாராட்டைப் பெற்றார். 1985 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் கோவையிலுள்ள VLB ஜானகியம்மாள் பொறியியற் கல்லூரியில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் ஆற்றிய பணியின் மேன்மையை உணர்ந்து கொண்ட கல்லூரி நிர்வாகம் தங்களது VLB ஜானகியம்மாள் பாலிடெக்னிக் நலிவடைந்த நிலையிலிருந்ததால் அதற்குப் புத்துயிரூட்ட அவரது சேவையைப் பயன்படுத்திக் கொண்டது. பாலிடெக்னிக் கல்லூரிக்கெனப் புதிய இடமும் அளித்தது. அவ்விடத்தில் புதிய கட்டிடங்களை நிர்மாணித்து லிவிங்ஸ்டன் கல்லூரியை மிகவும் சிறந்த முறையில் நடத்தி வருகிறார்.
மாணவர்களின் நலனில் தனி அக்கறை எடுத்து, பிற ஆசிரியர்களை வழிநடத்தி, மாணவர்களின் பெற்றோரிடம் கலந்து பேசி அவர்களது மனக்குறைகளை நிவர்த்தி செய்து, மாணவர்களை அவர்களின் போக்கிலேயே சென்று அவர்களைக் கல்வியில் மட்டுமல்லாது நல்லொழுக்கம், மற்றும் கல்வி சார்ந்த, சாராத கலைத் துறைகளிலும் வழிநடத்தி அனைவரின் அன்பையும் பெற்றிருக்கிறார் லிவிங்ஸ்டன். அவரால் நன்மையடைந்த மாணவர்கள் ஏராளம். எடுத்துக்காட்டாக் ராமச்சந்திரனைச் சொல்லலாம். பள்ளியிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய நிலையிலிருந்த அந்த மாணவர் அவரின் பெற்றோர்களின் பெருமுயற்சியால் தண்டனையிலிருந்து தப்பினாலும் 10 ஆம் வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண்களே பெற்றுத் தேற முடிந்தது. ராமச்சந்திரனின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கி அவரைக் கண்ணும் கருத்துமாய்க் கண்காணித்து டிப்ளமோ படிப்பில் "ஹானர்ஸ்" பட்டம் பெற பெரிதும் உதவியாக இருந்தார் லிவிங்ஸ்டன். அதன் பின் VLB ஜானகியம்மாள் பொறியியற்கல்லூரியில் B.E. Civil Engineering பயின்று அமெரிக்காவில் M.S. படித்து இப்பொழுது அமெரிக்காவிலுள்ள 'லாஸ் வேகாஸ்' பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பதவியிலிருக்கிறார் ராமச்சந்திரன். அவருக்கு விரைவில் சென்னையில் திருமணம் நடக்கவிருக்கிறது. தன்னை நல்வழிப்படுத்தித் தனது வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஆசிரியர் லிவிங்ஸ்டன் அவர்களை நன்றி மறவாத அம்மாணவர் திருமணத்திற்கு வருந்தி அழைத்திருக்கிறார்.
லிவிங்ஸ்டன் முதல்வராய்ப் பணியாற்றும் VLB ஜானகியம்மாள் பாலிடெக்னிக் பல விசேட விருதுகளை வென்றுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:
1988-89 Best Project Award
2001 The Best Teacher Award from Lions Club (வென்றவர் லிவிங்ஸ்டன்)
2002-2003 The Best ISTE Chapter Chairman Award மற்றும் The Best polytechnic teacher Award (வென்றவர் லிவிங்ஸ்டன்)
2003-2004 The Best Teacher Award from ISTE (Indian Society of Technical Education) (வென்றவர் லிவிங்ஸ்டன்)
2003-2004 The Best NSS unit award from DTE (Department of Technical Education) வென்றது VLB ஜானகியம்மாள் பாலிடெக்னிக்
The Best NSS volunteer Award from DTE (Department of Technical Education) வென்றது ஒரு மாணவர்
தலைசிறந்த ISTE Chapter Chairman விருதுக்குத் தகுதி பெறப் பல துறைகளின் சாதனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவற்றுள் சில:
Infrastructure Building
Technical curriculum and co curricular activities
Technical paper presentation
Contribution for Institution development
Staff development
இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு, "சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம் வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்களைச் சந்திக்கிறேன். அவர்கள் சாதாரண மனிதர்களாக பத்தோடு பதினொன்று என்று வாழாமல் தனித்து நிற்க வேண்டும், சாதனைகள் புரிய வேண்டும், வாழ்வில்
வரும் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு கடினமாய் உழைக்க வேண்டும் என்று அவர்களை ஊக்குவிப்பேன். படிப்பில் அக்கறை செலுத்தாத அல்லது செலுத்த இயலாத மாணவர்களை அவர்களது வருகைப்பதிவு (attendance) மற்றும் அவர்களது ஆசிரியர்களின் கணிப்பு ஆகியவற்றைக் கொண்டு அடையாளம் கண்டு கொண்டு அம்மாணவர்களைத் தனியே அழைத்துப் பேசுவேன். மாணவரிடத்தில் காணும் நற்பண்பு அல்லது திறமையைப் பாராட்டத் தவற மாட்டேன். பாராட்டைப் போல் உற்சாகமளிக்கும் மருந்து வேறு கிடையாது. மீண்டும் மீண்டும் ஆசிரியரின் பாராட்டைப் பெற வேண்டும் என்று மாணவர்கள் மேலும் கடுமையாக உழைப்பார்கள். மாணவர்களின் வெற்றியே கல்லூரியின் வெற்றி. மாணவர்கள் சிலரிடத்தில் நற்பண்பு குறைந்து காணப்படின் அவர்களை 'சாம, பேத, தான தண்டம்' என நம் முன்னோர்கள் கூறிய அனைத்து வழிகளிலும் திருத்தப் பாடுபடுவேன். நாம் நம் கடமையை முழு ஈடுபாட்டுடன் செய்வோமாயின் வெற்றி நிச்சயம்." என்கிறார்.
இவர் போன்ற ஆசிரியர் பலர் உருவாக வேண்டும். மாணவர் யாவரும் உயர வேண்டும். அப்பொழுது தான் நாடு உயரும்.
Livingston Peter Goldwyn Receiving "Best Teacher" award from Tamilnadu CM
